Friday 12 November 2010

நீ எங்கு இருக்கிறாய் ?




காற்றும் என்னைச் சாடுகிறது,

காலம் என்னை தூற்றுகிறது

ஏன் எங்களை இழுத்தடிக்கிறாய் என்று. . .

இயற்கையே. . ! இப்படி பழிக்கிறது

இதில்,

நண்பர்களிடத்தில் நான் எப்படி குறை காண்பது. . ?

காரணம். . ? சொல்லபடுகிறது

காலத்தில் எனக்கு

காதல் வரவில்லையாம். . .

நகைக்கிறேன்,

மீண்டும் நகைக்கிறேன். . .

தனிமையின் தாராளம்

என்னைச் சூழும் தருணங்களில்

காற்றும் என்னைச் சாடுகிறது,

காலம் என்னை தூற்றுகிறது. . .


நீ எங்கு இருக்கிறாய் ?

மழையின் சாரல்,

தென்றலின் தழுவல்,

இலைகளின் நிறம்

இவைகள், நீ இன்றி

உணர்வு தர மறுக்கின்றன. . .



உன் கண்களை மறைக்கும்,

முகப்பு கூந்தலை தளர்த்தி

முத்தம் கொடுக்க,

என் உதடுகள் தவம் கிடக்கிறது. . .

உன் கைபிடித்து

நான் நடக்கும் தருனங்களுக்காக

என் கற்பனை பூங்காக்களில், மரங்கள்

மகரந்த பூக்களை உதிர்க்காமல் காத்திருக்கிறது. . .

நீ எங்கு இருக்கிறாய் ?

தெரியாது

நீ எப்படி இருப்பாய் ?

சத்தியமாக தெரியாது. . .

ஆனால் !

உன்னை நம்புகிறேன். . .

நீ எனக்கான இறைவனின் கருணை. . .

காற்றை பாடவை,

காலத்தை போற்றவை. . .

- கண்ணப்பன்

1 comment:

Sekara said...

Nice one... would like to follow u..
wh is the option????

Plz add that option..